நடந்தையில் சந்தேகம்... மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய அம்பை இளைஞர் கைது
நெல்லை: அம்பையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அருகே அம்பை பிரம்மதேசம் பாலகன் கோயிலை தெருவை சேர்ந்தவர் பிரம்மகுட்டி. . கூலி தொழிலாளியான இவரது மனைவி ராஜம். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இஸ்யா, நாதஸ்வரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பிரம்மகுட்டி அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நடந்தையிலும் சந்தேகம் பட்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவரை சமாதானப்படுத்தி கூட்டி வர சென்ற பிரம்மக்குட்டியின் முயற்சி பலிக்கவில்லை. இதனால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் பிரம்மக்குட்டி.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிரம்மகுட்டி மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்த ராஜத்தை மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர் வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மாமனார் சந்திரசேகர், மாமியார் முத்துலெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் சராமரியாக வெட்டியுள்ளார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த முன்னாள் நகராட்சி சேர்மன் ராதாகிருஷ்ணன் அங்கு வரவே அவரை பார்த்த பிரம்மகுட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அம்பை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு படை ஏட்டு எட்வின் உள்ளி்ட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரம்மகுட்டியைப் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.