நடத்தையில் சந்தேகம்- கணவனை அடித்துக் கொன்று நாடகமாடிய மனைவி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கணவனைக் கொன்றுவிட்டு, அவர் மதுவால் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே மாதவன்நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் கூலித்தொழிலாளி.
இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர்.
நடத்தையில் சந்தேகம்:
வெள்ளையம்மாள் நடத்தையில் சித்திரைவேல் அடிக்கடி சந்தேகம் அடைந்து தகராறு செய்துவந்துள்ளார்.இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவனை அடித்து, துவைத்த மனைவி:
இதில் சித்திரைவேல், வெள்ளையம்மாளை அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள் பதிலுக்கு வீட்டிற்கு வெளியே கிடந்த விறகு கட்டையை எடுத்து வந்து சித்திரைவேலை சரமாரியாக அடித்துள்ளார்.
படுகாயமடைந்த சித்திரவேல்:
இதில் படுகாயம் அடைந்த சித்திரைவேல் சரிந்து விழுந்தார்.உடனே வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளையம்மாள் அருகில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று தங்கினார். நேற்று காலை வீட்டைத் திறந்து பார்த்தபோது சித்திரைவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மதுவால் இறந்ததாக நாடகம்:
அதிர்ச்சியடைந்த வெள்ளையம்மாள் சுதாரித்துக்கொண்டு, ரத்தத்தை துடைத்து, தடயங்களை எல்லாம் அழித்தார். பின்னர் உறவினர்களிடம் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் கீழே விழுந்து சித்திரைவேல் இறந்ததாக தெரிவித்தார்.
இறுதிச்சடங்கு பணிகள்:
அதைத்தொடர்ந்து அவரது உடலை சம்பிரதாயப்படி இறுதிச்சடங்குகள் செய்யும் பணிகளையும் அவர் விரைவாக செய்துள்ளார். அவரது செயல்களில் சந்தேகமடைந்த உறவினர்களில் சிலர் சிப்காட் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்தனர்.
போலீசார் கைது:
போலீசார் விசாரணையில், வெள்ளையம்மாள், சித்திரைவேலை விறகு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.