கணவரின் 2வது திருமணம்.. ஸ்பாட்டுக்கே சென்று தடுத்து நிறுத்திய முதல் மனைவி
திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்த (42) பரமசிவம் என்பவருக்கும் கவிதா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரமசிவம் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ஆனைமலையை சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை பரமசிவம் செய்திருந்தார். இவர்களது திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண் வீட்டில் திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தது. இதில் உறவினர்களும் வந்திருந்தனர்.
இதற்கிடையே கணவர் பரமசிவம், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்ய உள்ள தகவல் மனைவி கவிதாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மகளிர் போலீசார், மணப்பெண் வீட்டுக்கு விரைந்து வந்து மணப்பெண்ணின் உறவினர்களுக்கு, பரமசிவம் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயல்வதை தெரிவித்தனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் பரமசிவத்தை அடித்து உதைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், அவர்களிடம் இருந்து பரமசிவத்தை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.