ப்ளஸ் 2விலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன், சி.ஏ. படிப்பேன்: 500க்கு 499 எடுத்த சிவகுமார் பேட்டி
விருதுநகர்: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ள விருதுநகர் மாணவர் சிவகுமார் சி.ஏ. படிக்க விரும்புகிறார். மேலும் ப்ளஸ் 2விலும் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிகுளத்தில் உள்ள நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவர் சிவகுமார் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளார்.
அவர் தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மீதமுள்ள 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சிவகுமார்
மாநிலத்தில் முதலாவதாக வந்துள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சிவகுமார் தெரிவித்துள்ளார். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார் சிவகுமார்.
மனப்பாடம்
பாடங்களை புரிந்து படிக்க வேண்டுமே தவிர மொட்டை மனப்பாடம் செய்யக் கூடாது. நான் கடினமாக உழைத்தேன். அதனால் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என்று எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தபடியே நடந்துள்ளது.
எழுதி எழுதி
எங்களை போன்றே ஆசிரியர்களும் கடினமாக உழைத்தார்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். பாடங்கள் திரும்பத் திரும்ப எழுதி படித்தேன்.
சி.ஏ.
நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். அதனால் ப்ளஸ் 1 வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுக்கப் போகிறேன். பத்தாம் வகுப்பை போன்றே ப்ளஸ் 2 தேர்விலும் மாநிலத்தில் முதலாவதாக வருவேன்.