சுழற்சி முறையில் முதல்வர் பதவி?
சென்னை: அதிமுக இணைப்பு தொடர்பாக நிலவும் இழுபறியால் தொண்டர்கள் விரக்தியில் இருக்கும் நிலையில் விரைவில் அதுதொடர்பான சுமூக முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுக இணைப்பு தொடர்பாக சில விஷயங்களையும், தனது தரப்பு யோசனைகளையும் அவரிடம் தெரிவித்தாராம் ஓ.பி.எஸ். தனது அணியினரின் கருத்துக்களையும் அவர் பிரதமரிடம் கூறியதாக தெரிகிறது.
ஓ.பி.எஸ். முன்வைத்த யோசனைகளில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்கலாம் என்பதும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
இரண்டில் ஒன்று
முதல்வர் பதவி அல்லது கட்சி பொதுச் செயலாளர் பதவியை தனது அணிக்குத் தர வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்கலாம் என்ற யோசனையையும் அவர் முன்வைத்ததாக தெரிகிறது.
முதல்வர் அனுபவம் ஓ.பி.எஸ்ஸுக்கே அதிகம்
மேலும் முதல்வர் பதவியில் ஓ.பி.எஸ் 3 முறை இருந்துள்ளார். நிர்வாக ரீதியாக நல்ல அனுபவம் படைத்தவர் அவர்தான். மேலும் அதிகாரிகள் அளவிலும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. நிதானமான அணுகுமுறை கொண்டவர். அதிர்ந்து பேசாதவர். இப்படி சாதகங்கள் பல ஓ.பி.எஸ்ஸிடமே இருப்பதால் அவர் முதல்வராக இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் பிரதமரிடம் கூறப்பட்டதாம்.
முதல்வரை மாற்ற எடப்பாடி தரப்பு ஆட்சேபனை
அதேசமயம், முதல்வரை அடிக்கடி மாற்றினால் சரியாக இருக்காது. மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாம். எனவே இணைப்புக்குப் பின்னர் முதல்வர் பதவி மாற்றம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
தினகரன் தரப்புக்கு நெருக்கடி
இதற்கிடையே தினகரன் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதால் அவர்கள் இறங்கி வந்தாக வேண்டிய நிலை அதிகரித்துள்ளது. எனவே விரைவில் அவர்கள் ஓ.பி.எஸ். தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது. ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி தரப்புடன் தினகரன் தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.