காங்கிரஸுக்கு என்னென்ன தொகுதிகள் கிடைக்கும்?.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.
முன்பு ஜி.கே.வாசன் அணி காங்கிரஸ் கட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியிலேயே மிகப் பெரிய கோஷ்டியாக அதுதான் இருந்தது. அது போன பிறகு கட்சியில் ஒரு விறுவிறுப்பே இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் கடந்த 2011 தேர்தலைப் போலவே இந்த முறையும் திமுகவுடன் இணைந்துள்ளது காங்கிரஸ். அக்கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை.
இருப்பினும் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தொகுதிகளில் பல இந்த முறை கிடைக்க வாய்ப்புள்ளது. காரணம், அவையெல்லாம் அதிமுக வலுவாக இருந்த தொகுதிகள் என்பதால்!
வடக்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு வட பகுதிகளில்தான் அதிக தொகுதிகள் கிடைத்தன. கிழக்கு மண்டலத்தில் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. வடக்கு மண்டலத்தில் 20 தொகுதிகள் கிடைத்தன. இங்குதான் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தது.
தெற்கில் 19.. மேற்கில் 11
தென் மண்டலத்தில் 19, மேற்கு மண்டலத்தில் 11, கிழக்கு மண்டலத்தில் 5 தொகுதிகள் கிடைத்தது. அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் தேவை என்று காங்கிஸ் கூறி வந்தபோதிலும், மூன்று மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படவில்லை.
தேனி, தர்மபுரி, பெரம்பலூர் இல்லை
தேனி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கவில்லை. அதேபோல மதுரை மேற்கு, நாமக்கல் ஆகிய தொகுதிகளும் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.
மேற்கைப் பறித்து வடக்கு, தெற்கைக் கொடுத்த திமுக
மதுரை மேற்கைப் பறித்த திமுக அதற்குப் பதில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய இரு தொகுதிகளை காங்கிரஸுக்குக் கொடுத்தது. அதாவது மதுரை மாநகரில் உள்ள 5 தொகுதிகளில் 2 காங்கிரஸுக்குப் போனது. மீதமுள்ள மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.
கொங்கு மண்டலத்தில் பம்மிய திமுக
அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்ந்ததால் அங்கு திமுக அதிகம் போட்டியிடவில்லை. மாறாக அந்தப் பகுதியில் 10 தொகுதிகள் உள்பட மேற்கு மண்டலத்தில் மொத்தமாக 11 தொகுதிகளையும் காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுக கிட்டத்தட்ட கை கழுவி விட்டது.
சென்னையிலும் காங்கிரஸே
அதேபோல சென்னையிலும் கூட அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளான ராயபுரம், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளை இந்த முறை காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. தான் வென்ற அண்ணா நகர், புதிதாக உருவாகியுள்ள திரு.வி.க நகரையும் காங்கிரஸுக்கே கொடுத்தது.
நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகள்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நான்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், நான்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் காங் போட்டியிட்டது.
ராதாபுரம்
2006 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் இருந்தன. இதில் கடையநல்லூர், நான்குநேரி,சேரன்காதேவி ஆகிய தொகுதிகளைதான் காங் கைப்பற்றியது. தொகுதி சீரமைப்பை தொடர்ந்து சேரன்மகாதேவி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக ராதாபுரம் தொகுதி ஓதுக்கப்பட்டது. இதனால் ராதாபுரம் தொகுதியை திமுக வசமிருந்து காங் கைப்பற்றியது.
இந்த எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.