சசி குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு சிறை?... இன்று தம்பி திவாகரன் மீதான கடத்தல் வழக்கில் தீர்ப்பு!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 40. இவர், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக நாகை கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் தங்கை மகள் யாழினி. 22 வயதான இவர் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது, ஒருவரை காதலித்து யாழினி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக, சரவணனை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, திவாகரனின் ஆட்கள் கடத்திச் சென்று மிரட்டியும், கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாகக் கூறியும், 1 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக எடையூர் போலீசில் சரவணன் புகார் செய்தார்.
இந்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.
மன்னார்குடியைச் சேர்ந்த திவாகரன், சசிகலாவின் தம்பி ஆவார். ஏற்கனவே சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்குப் போய் விட்டனர். இந்த வரிசையில் திவாகரனும் சேருவாரா என்பது இன்று தெரியும்.