சிக்கலில் இரட்டை இலை சின்னம்.. ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு காத்திருக்கு தலைவலி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் முடிவு மட்டுமின்றி, தேர்தலில் அதிமுக எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகவும்தான்.
ஜெயலலிதா முதல்வர் மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் வரப்போகிறது.
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
சின்னம்
அந்த வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கச் சொல்லி தேர்தல் அதிகாரிக்குத் தரப்படும் 'பார்ம் பி-யில்' ஜெயலலிதா கையெழுத்துக்கூட போடமுடியாத நிலையில் கைநாட்டுதான் வைத்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் மக்களிடம் இருந்த அனுதாபத்தை பெற்று, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
எதிர்ப்புகள்
ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில், ஆளும் கட்சியின் வெற்றி எளிதாக வாய்க்க போவதில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஜெயலலிதாவின் மர்ம மரணம், அதிமுக சசிகலா வசம் போனது, அதிமுக முக்கிய தலைவரான பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குள் போனது, தீபாவின் குற்றச்சாட்டுகள, தினகரனின் ஆதிக்கம் என ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக திரும்ப மக்களுக்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
ஓ.பி.எஸ் அணி மனு
ஆர்.கே.நகர் தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட்டால் நான்குமுனைப் போட்டி ஏற்படலாம். இங்கு போட்டியிட்டால்தான் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு ஓ.பி.எஸ் அணி மனு செய்ய முடியும்.
சின்னம் முடக்கம்?
அதனால் இரட்டை இலை முடக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருக்குமா? என்ற கேள்வி தற்போது பெரிதாக பேசப்படுகிறது.