அதிமுக இழந்த பெண்கள் ஆதரவை இழுக்க வலைபோடும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புகள்!
அதிமுகவுக்கு எதிராக பெண்கள் திரும்பினர். இந்த நிலையில், பெண்களை கட்சி பக்கம் ஈர்க்க மேற்கண்ட திட்டங்களை கையில் எடுத்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அரசு.
சென்னை: பெண்களிடம் அதிமுக கட்சி இழந்த செல்வாக்கை மீட்க பெண்கள் நல திட்டங்கள் பலவற்றை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மே 23ம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும்.
இதைத்தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படத் தொடங்கின.
மண்டலவாரி
அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் மூடப்பட வேண்டிய 500 மதுக்கடைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று சென்னை மண்டலத்தில் 58 மதுக்கடைகள், கோவை மண்டலத்தில் 60 மதுக்கடைகள், மதுரை மண்டலத்தில் 201 மதுக்கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 மதுக்கடைகள், சேலம் மண்டலத்தில் 48 மதுக்கடைகள் என மொத்தம் 500 மதுக்கடைகள் ஜூன் மாதம் மூடப்பட்டன. ஆனால் இவை எல்லாம் விற்பனையில் மந்தமாக இருந்த மதுக்கடைகளாகும்.
அன்புமணி விமர்சனம்
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மேலும் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "மது ஆலை அதிபரான சசிகலாவின் வழிகாட்டுதலில் செயல்படும் அரசு என்பதால், மிடாஸ் ஆலையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க ஆணையிட்டால் கூட ஆச்சரியப்பட முடியாது" என்று பாமக அன்புமணி ராமதாஸ் நேற்றுதான் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மக்களை அதிலும் பெண்களை கவரும் வகையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திட்டங்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தும் திட்டத்திலும் கையெழுத்திட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மீனவர்களுக்கு தனி வீடு வசதித் திட்டம், மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாய் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க 50% மானியம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கான கோப்புகளிலும் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார். இதில் பெரும்பாலான திட்டங்கள் பெண்களை கவரும் திட்டங்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சரிந்த செல்வாக்கு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு கிடைத்து வந்த பெண்கள் ஆதரவு குறையத்தொடங்கியது. ஜல்லிக்கட்டு போராட்டம், சசிகலா கட்சி தலைமைக்கு வந்தது, ஓ.பி.எஸ் பதவி பறிப்பு என்பது போன்ற சம்பவங்களின்போது அதிமுகவுக்கு எதிராக பெண்கள் திரும்பினர். இந்த நிலையில், பெண்களை கட்சி பக்கம் ஈர்க்க மேற்கண்ட திட்டங்களை கையில் எடுத்துள்ளது சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அரசு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.