'கா.சி'க்கு எதிராக களம் குதிப்பாரா ஈவிகேஎஸ் மகன் திருமகன்'?
ஈரோடு: ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கலந்து கொண்டு தலைமை தாங்கிப் பேசினார். இவரை ப.சிதம்பரத்தின் மகனும், தற்போது இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருப்பவருமான கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இளங்கோவன் தரப்பு களம் இறக்குமா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அரசியலிலும், சினிமாவிலும் மட்டும்தான் வாரிசுகள் படு சுலபமாக நுழைந்து பாதுகாப்பான முறையில் கோலோச்ச முடியும். அந்த வகையில் அரசியலிலும் ஏகப்பட்ட வாரிசுகள் கலக்கிக் கொண்டுள்ளன. அதிலும் காங்கிரஸ் கட்சியில் வாரிசு என்பது பிறப்புரிமையாகும். இங்கு பிரகாசிக்கும் எல்லாத் தலைவர்களின் வாரிசுகளையும் கட்சியில் பார்க்க முடியும்.
ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரம் ரொம்ப காலமாகவே எந்தப் பதவியும் இல்லாமலேயே கட்சியைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வியர்வை சிந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக சரித்திரமே கிடையாது. ஆனாலும் காங்கிரஸின் முக்கியத் தலைவர் இவர். இப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக தீவிர "கட்சிப் பணி"யாற்றிக் கொண்டிருக்கிறார் கார்த்தி.
இந்த நிலையில் கார்த்தியைப் போலவே நீண்ட காலமாக கட்சியில் இருந்து வரும் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேராவும் கட்சியில் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு மாநிலப் பொறுப்பாளராக இருக்கிறார்.
ஈரோட்டில், மாவட்ட எஸ்.சி பிரிவு சார்பில் காளை மாடு சிலை அருகே காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒழிக்க முயலும் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கு திருமகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஏழை- எளிய மக்களுக்கு வேலை கேட்கும் உரிமையை சட்டமாக அமல்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பாக இருந்தது.
பா.ஜ.க அரசு வலது சாரி பொருளாதார கொள்கையால் நிதி பற்றாகுறையை காரணம் காட்டி, 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சிக்கிறது. மேலும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் இந்த திட்டத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை முடங்கினால் விவசாய தொழிலாளர்கள் மற்றும் தலித் பெண்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் ஆட்சியை விட்டு சென்றபோது கூட இந்த திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்தியில் ஆட்சியில் பா.ஜ.க அரசு, இதில் ரூ.5 ஆயிரம் கோடியை குறைந்து இருக்கிறது.
இந்த பிரச்சினையை இத்துடன் விட போவது இல்லை. இந்த திட்டத்தால் பயன் அடைய மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். தற்போது காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் ஆர்வமாக வந்து சேருகிறார்கள். மதசார் பின்மை கொள்கையை கொண்ட கட்சி காங்கிரஸ் மட்டும்தான். சமூக நலனுக்கு உகந்த கட்சியாக விளங்குகிறது. மீண்டும் வீறு கொண்டு காங்கிரஸ் எழும் என்றார் திருமகன்.
குடைச்சல் கொடுக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு முட்டுக்கட்டை போட மகன் திருமகனை தீவிரமாக களம் இறக்குவாரா இளங்கோவன் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.