தனிக்கட்சி தொடங்காமல்.. முக்கிய கட்சியில் சேருவாரா கமல்?
சென்னை: கமலுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது கமல்ஹாசன் புதிய கட்சியெல்லாம் தொடங்கும் திட்டத்தில் இல்லை என்றும், அதேசமயம், ஒரு முக்கியமான கட்சியில் அவர் இணையக் கூடும் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பை மேற்கோள் காட்டி ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசன் சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், வக்கீல்களையும் சந்தித்தார். அது வழக்கமான சந்திப்புதான். விசேஷமானது அல்ல. தன் மீதுள்ள சில வழக்குகள் குறித்து வக்கீல்களுடன் கமல் விவாதித்தார். மன்றப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவ்வளவுதான்.
தனிக்கட்சிக்கு வாய்ப்பில்லை
கமல்ஹாசன் தனிக் கட்சி தொடங்குவார் என்று தோன்றவில்லை. அந்தத் திட்டத்தில் அவர் இருப்பதாகவும் தெரியவில்லை. அதேசமயம், அவர் ஒரு முக்கியக் கட்சியில் சேரலாம். அதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று கமலுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுவதாக அந்த செய்தி போகிறது.
எதில் சேருவார்?
ஆனால் கமல் போய்ச் சேரும் அளவுக்கு தமிழகத்திலோ அல்லது தேசிய அளவிலோ எந்தக் கட்சி உள்ளது என்பதுதான் தெரியவில்லை. அதிமுகவைக் கைப்பற்றுவாரா என்று கேட்கலாம். தெரியவில்லை. திமுகவில் சேரும் வாய்ப்பு இருக்கா என்பதும் தெரியவில்லை. பாஜக சான்ஸே கிடையாது. காங்கிரஸ் கட்சியில் சேருவாரா என்றும் தெரியவில்லை.
எதிர்பாராதது
கமல்ஹாசன் அரசியல் பேசுவார் என்பதே யாரும் எதிர்பாராத ஒரு விஷயம்தான். அதை விட யாரும் எதிர்பாராதது கமல்ஹாசனின் அதிரடி டிவீ்ட்டுகள். சத்தியமாக யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரின் கவனமும் ரஜினி மீதுதான் கடந்த பல வருடங்களாகவே இருந்து வந்தது. கமல் எங்கே வரப் போகிறார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கமல் சில டிவீட்டுகளிலேயே மொத்த மாநிலத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார்.
தனிப் பாதையா.. வகுத்து வைத்த பாதையா
எனவே அவர் அரசியல் களம் நோக்கி எப்படி பயணிக்கப் போகிறார், தனிப் பாதை வகுப்பாரா அல்லது யாராவது தலைவன் முன்கூட்டிய வகுத்து வைத்த பாதையில் இணைந்து நடை போடுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.