புதுச்சேரி 2 ஆண்டுகளில் தன்னிறைவு பெறும்... ஜெ.வை விரைவில் சந்திப்பேன்: நாராயணசாமி
திருச்சி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் இன்னும் 2 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றதாக மாற்றும் என புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் தான் விரைவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அவர் நெய் விளக்குகள் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினார். இதையடுத்து நாரயணசாமி செய்தியார்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியிருக்கிறேன். மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்களிடம் விடுத்துள்ளேன்.
புதுச்சேரி யூனியன் 2 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்றதாக மாறும். குடிசைகள் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5000 குடிசைகள், கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும். புதிய கல்வி கொள்கையை தனிப்பட்ட முறையில் நான் எதிர்க்கிறேன். அது தொடர்பாக நன்கு ஆராய்ந்து, மத்திய அரசுசிடம் கருத்து தெரிவிப்பேன்.
நாங்கள் ஏற்கனவே, தமிழக மக்களுடனும், தமிழக அரசுடனும் சுமூகமான உறவு கொண்டிருக்கிறோம். புதுச்சேரிக்கான சில வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் என்று கூறினார்.