எடப்பாடிக்கு போட்டியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் ஓபிஎஸ் ராஜினாமா?
சென்னை: சட்டசபையைக் கூட்டி ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்தால் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிடுவார் என்றே தெரிகிறது.
சசிகலாவை முதல்வராக விடாமல் தடுக்க முடிந்த பன்னீர்செல்வத்தால் போதிய எம்எல்ஏக்களை இழுக்க முடியவில்லை. அவர் வசம் 11 எம்எல்ஏக்களே உள்ளனர்.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி வசம் 124 எம்எல்ஏக்கள் உள்ளதாக சசிகலா தரப்பு கூறி வருகிறது. இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதோடு ஏராளமான கவனிப்புகளும் செய்யப்பட்டுவிட்டன. இந்த எம்எல்ஏக்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அன்பளிப்புகளை கொட்டிக் குவித்துக் கொண்டுள்ளது சசிகலா தரப்பு. இதனால் பெரும்பாலானவர்கள் சசி ஆதரவு நிலையில் இருந்து மாறவில்லை.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் தந்த யோசனையின்படி சட்டசபையைக் கூட்டி முதலில் காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவரால் நிரூபிக்க முடியாவிட்டால், அதே கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
ஆனால், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தால் பன்னீர்செல்வம் தரப்பால் 12 பேருக்கு மேல் ஆதரவைக் காட்ட முடியாது என்பதால் அவர் ராஜினாமா செய்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.