கலாச்சாரம் என்ற பெயரில் அண்ணா சாலை கிளப்களில் ஆபாசம்... நள்ளிரவில் கசமுசா நடனம் !
கலாச்சாரம் என்ற பெயரில் சென்னை அண்ணா சாலையில் உள்ள கிளப்களில் பெண்களின் ஆபாச நடனங்கள் அரங்கேறுகின்றன.
சென்னை : கலாச்சார நடன நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னையில் நள்ளிரவில் பெண்களின் ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, ஆனால் "லஞ்சம்" வாங்கிக்கொண்டு காவல்துறையினர் இதனைக் கண்டு கொள்வதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான செய்தித் தொகுப்பை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை வாகன நெரிசலுடன் எப்போதும் ஹாரன் சத்தம் பறக்கும் பரபரப்பான சாலை. இந்த சாலைக்கு மிக அருகில் உள்ள ஒரு தெருவில் நள்ளிரவு நேரத்தில் ஆபாச நடனம் நடக்கிறது. வாசலில் ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பாடல்கள் ஒலிக்க அன்ன நடை போட்டு கொண்டு விதவிதமான அலங்காரத்தில் வரும் பெண்கள் ஆபாச நடனம் ஆடுகின்றனர். இரண்டு கம்பிகளுக்கு நடுவே ஆடும் பெண்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆபாச நடனம்
காதைக் கிழிக்கும் இசைக்கேற்ப உற்சாகத் தள்ளாட்டம் போடும் போதை ஆசாமிகள், நடனமாடும் பெண்களுக்குப் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றனர். சிலர் எல்லை மீறி நடனமாடும் பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை தலையில் வாரி இறைக்கின்றனர்.
பணத்தை அள்ள தனி ஆட்கள்
ஆபாச நடனமாடும் பெண்களுக்கு பார்வையாளர்கள் அள்ளி வீசும் பணத்தை சேகரிப்பதற்காகவே 2 பேர் உள்ளனர். அவர்கள் கீழே விழும் ரூபாய் தாள்களை எடுக்கும் வேலையைச் செய்கின்றனர்.
போலீசுக்கு தெரியாதா?
கலாச்சார மையம் என்ற பெயரில் சென்னையின் மைய இடமான அண்ணாசாலையிலேயே இது போன்ற ஒரு ஆபாச நடனம் நடப்பது போலீசாருக்குத் தெரியாமலா இருக்கும் என்ற சந்தேகம் எழும். ஆம் காவல்துறையினர் ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு இந்த கலாச்சார நடனத்தை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுவும் போதை தான்
மது, போதைப் பொருள் பழக்கம் போல சிலர் இந்த ஆபாச நடனத்திற்கு அடிமையாகி அவற்றை காண கடன் வாங்கி வந்து பணத்தை வாரி இரைத்து விடும் கதையும் நடக்கிறது. நள்ளிரவு நடனத்தில் இறுதிமுடிவு எப்படித் தெரியுமா இருக்கிறது, தொடக்கத்தில் இருந்து தனித்தனியாக வந்து ஆடிய பெண்கள், முடிவில் 12 பேரும் ஒரே இடத்தில் வந்து நடனமாட போதைமகன்களும் குத்தாட்டம் போடுகின்றனர்.
நடவடிக்கை பாயுமா?
கலாச்சார மையத்தை சுற்றி குண்டர்கள் எப்போதும் வலம் வந்தபடியே இருக்கின்றனர். பெண்களை போதைப்பொருளாகப் பயன்படுத்தி காசு சம்பாதிப்பவர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.