ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னதை யாராவது நிரூபித்தால் அரசியலை விட்டே வெளியேறுவேன்: குஷ்பு
சென்னை: குஷ்புவை இந்திராகாந்தி உருவத்தில் பார்க்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எந்த இடத்தில், எந்தப் பேட்டியில் சொன்னார் என்று யாராவது நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டே வெளியேறி விடுகிறேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.
சினிமாவில் நடிக்கும் போதும் சரி சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பு, டிவி சீரியல் என மாறிய பின்பும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பவர் குஷ்பு. கருத்துக்களை காரசாரமாக கூறி கலாட்டாக்களுக்கு காரணமாக இருந்த குஷ்பு கடந்த 5 ஆண்டுகாலமாக அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
திமுகவில் இருந்த போதும் சரி காங்கிரஸ் கட்சிக்கு மாறிய போதும் சரி சீனியர் அரசியல்வாதிகளுக்கே சவால்விடும் வகையில் ஊடகங்களில் பேட்டி தருகிறார். குஷ்புவின் போல்டான டிவி பேட்டிகளைப் பார்த்து காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தியே பாராட்டியிருக்கிறாராம். தனக்கு பிடித்த தலைவர்கள் பற்றி இன்றைய அரசியல் சூழலில் பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார் குஷ்பு.
சாமி கும்பிட மாட்டேன்
மும்பையில்தானே நான் பிறந்து வளர்ந்தேன். அங்கே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ரொம்ப விசேஷமா இருக்கும். அதனால் எனக்கும் விநாயகர் மேல ஒரு பிரியம். மத்தபடி நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் சாமி கும்பிட்டது இல்லை. அப்பவும் இப்பவும் நான் ஒரு பெரியாரிஸ்ட்தான்!.
பிடித்த தலைவர்கள்
இந்திரா காந்தி. அவங்க துணிச்சல் ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு நான் காங்கிரஸ்ல இருக்கிறதால சொல்லலை. எனக்கு எப்பவுமே பிடித்த தலைவர் காமராஜர்.
கருணாநிதியின் அபிமானி
அரசியலில் நுழைந்த உடன் கருணாநிதியிடம்தான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். என் மனசுல அவரை மிகப் பெரிய ஸ்தானத்துல வெச்சிருக்கேன்!.
பதவி ஆசையில்லை
எந்த இடத்தையும் எதிர்பார்த்து நான் அரசியலுக்கு வரலை. பதவி ஆசையும் எனக்குக் கிடையாது. காங்கிரஸ்ல தேசிய செய்தித் தொடர்பாளர் பதவிக்கு என் பெயரை அறிவிச்சப்போ, நான் சிங்கப்பூர்ல இருந்தேன். கொடுத்த பதவியை வெச்சுக்கிட்டு மேக்ஸிமம் என்ன பண்ண முடியுமோ, அதைப் பண்ணுவேன்.
கொந்தளித்த குஷ்பு
குஷ்புவை இந்திராகாந்தி உருவத்தில் பார்க்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எந்த இடத்தில், எந்தப் பேட்டியில் சொன்னார் என்று யாராவது நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டே வெளியேறி விடுகிறேன்.