தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: ஈவிகேஎஸ் அதிரடி
ஈரோடு: தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆதாரத்துடன் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்து கூறுவதுடன், கட்சியை பலப்படுத்துவதே நோக்கமாகும்.தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் திருமண பத்திரிகை கொடுத்தது அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை.
தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்' என்றார்.