அடிக்கடி கை ஓங்கும் "கேப்டன்" கட்சியில் இணைவாரா "ஆக்ஷன் தலைவி" சசிகலா புஷ்பா?
சென்னை: பொது இடத்தில் அடிதடிக்கு பிரபலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பெண் அவதாரம் போல உருவாகியுள்ளார் சசிகலா புஷ்பா. எனவே இவர் தேமுதிகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திமுக எம்.பி., திருச்சி சிவாவை, டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து கன்னத்தில் அடித்து, பரபரப்பை கிளப்பியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா.
சசிகலா புஷ்பாவை போயஸ் கார்டன் அழைத்து கண்டித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில், ராஜ்யசபாவில் இன்று ஜெயலலிதா மீது தடாலடியாக புகார் பட்டியலை வாசித்தார் சசிகலா புஷ்பா. இந்த தகவல் வெளியானதுமே, அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
சசிகலாவின் அடுத்த மூவ்
இப்போது சசிகலா புஷ்பாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவர் குடும்பம் பெரிய அரசியல் பின்னணி எதையும் கொண்டது கிடையாது. எனவே, சசிகலா புஷ்பாதான் தனது வழியை தான் தேடிக்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்.
திமுக சேர்க்காது
இப்போது சசிகலா புஷ்பா திமுக பக்கம் செல்வாரா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தனது கட்சி எம்பியை பொது இடத்தில் அறைந்த ஒருவரை இணைத்துக் கொள்ள திமுக தலைமை தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரணகளம்
சரி, காங்கிரஸ் பக்கம் போகலாம் என்றால் அதுவும் முடியாது. அங்கு ஏற்கனவே திடீரென ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சத்தியமூர்த்தி பவனையே ரணகளமாக்கிவிடுவார்கள். இவரது அதிரடியெல்லாம் அங்கு சென்றால் ஜுஜுபிதான்.
ஆக்ஷனுக்கு ஏற்ற இடம்
சசிகலாவின் அதிரடி ஆக்ஷனுக்கு ஏற்ற இடம் தேமுதிகதான் என்கிறார்கள் வலைவாசிகள். அதிலும் ஏர்போர்ட்டில் துப்புவது, சக கட்சிக்காரரை அடிப்பது என புகழ்பெற்ற விஜயகாந்த் உள்ள அக்கட்சியே சசிகலா புஷ்பாவுக்கு ஏற்ற புகலிடமாக இருக்கும் என்று ஜாலியாக சொல்கிறார்கள் மக்கள்.
என்னவாகும்
அடிதடிக்குப் பிரபலமான தேமுதிகவில் சசிகலா புஷ்பா இணைவாரா. இவர்கள் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்ற ஜாலியான எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. ஒருவேளை விஜயகாந்த் 'ஒரு உரைக்குள் ஒரு வாள்தான் இருக்க முடியும்' என்று நினைத்துவிட்டால், அப்புறம், சசிகலா நிலைமை என்ன என்பது கேள்விக்குறிதான்.