ரஜினியை எதிர்க்க அன்புமணி - திருமா.வை ஓரணியில் கொண்டு வருவாரா சீமான்?
ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவரை எதிர்க்க புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் சீமான் திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்க்க புதிய அணியை உருவாக்க சீமான் உத்தேசித்துள்ளாரா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் முன்பு எழுந்துள்ளது.
கடந்த 21 ஆண்டுகளாக எப்படி வருவேன், எப்ப வருவேன்னு சொல்ல மாட்டேன். ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவேன் என்று வசனம் பேசி வந்த ரஜினி, தற்போது அரசியலுக்கு வருவதற்கு அச்சாரம் போட்டு வருகிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் கடந்த வாரம் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடவுள் தீர்மானித்தால் அரசியலுக்கு வரலாம். தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போயுள்ளது. அவற்றை சரி செய்து என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
போருக்கு தயாராகுங்கள்
அவரவருக்கு கடமைகள், வேலைகள் இருக்கும். இப்போது அவரவர் வேலை பாருங்கள். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். இதனால் ரசிகர்கள் குதூகலமாகினர். அவர் எப்போது அறிவிப்பார் என்று காத்து கிடக்கின்றனர்.
எதிர்ப்பும், ஆதரவும்
ரஜினியை நண்பராக பார்த்த அனைவரும் இன்று அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அரசியலுக்கு வரட்டும், ஆனால் தமிழகத்தை ஆளக் கூடாது என்கின்றனர். இன்னும் சிலரோ, அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும், பிறகு பார்க்கலாம். பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்து அவர் வெளியிட வேண்டும் என்று இன்னும் சிலர் கோருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள்
சில அரசியல் கட்சியினர், இதே 44 ஆண்டுகள் கர்நாடகத்தில் ஒரு தமிழர் வாழ்ந்தால் அவர் அந்த மாநிலத்தை ஆள விடுவரா என்றும் ஆங்கிலேயர்கள்கூடதான் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர், அதற்காக அவர்களும் தமிழர்களா என்றும் வினவுகின்றனர்.
தமிழகத்தில் வெற்றிடம்
தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. சொத்து குவிப்பு வழக்கை வைத்து கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலை தோற்கடிக்க முயன்ற திமுகவினர் தோற்றனர். திமுக ஆட்சியில் செய்த ஊழல், ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை உள்ளிட்ட காரணங்களால் திமுகவின் சகாப்தம் கிட்டதட்ட முடிந்துவிட்டதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அதேவேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டாலும் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தனர்.
உள்கட்சி மோதல்
தற்போது ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் தமிழகத்தில் மக்கள் நல பணிகளில் அமைச்சர்களும், முதல்வரும் ஆலோசனை நடத்துவதைவிட தங்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டும் அக்கறை காட்டி வருகின்றனர். மத்திய அரசை எதிர்க்க துணிவில்லாமல் அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் பாதகமாக இருந்தாலும் அவற்றை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிவில்லை. மீதமுள்ள பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இருந்தாலும் அந்தளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள கட்சிகள் போட்டிபோடுகின்றன.
சீமான் திட்டம்
ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். அன்புமணி, திருமாவளவன், கார்த்திக், நான் உள்பட அனைவரும் தமிழர்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர்களை சேர்த்துக் கொண்டு புதுக் கூட்டணி அமைக்க சீமான் முயல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நால்வர் கூட்டணி
தமிழர்களின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சிகள் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள்தான். இதில் கொடுமை என்னவென்றால் இந்த இரு கட்சிகளுக்கும் ஜாதிக் கட்சி என்ற பெயரைச் சூட்டி விட்டனர். பாமகவின் கொள்கைகளில் பலருக்கும் உடன்பாடு கிடையாது. திருமாவளவன் கொள்கை முடிவெடுப்பதில் ஸ்திரமற்று காணப்படுகிறார். இந்த நிலையில் இவர்களை தன் பக்கம் ஈர்த்து புதுக் கூட்டணி அமைக்க சீமான் முயல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாய்ப்பு குறைவுதான்
இருப்பினும் பாமகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் ஒரே அணியில் வைப்பது என்பதற்கு வாய்ப்பே இல்லை. இருவரும் இரு துருவங்கள். இணைந்து இருக்க முடியாதவர்கள். எனவே அப்படி ஒரு திட்டம் சீமானிடம் இருந்தால் அது வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்றே கூற முடியும்.