ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிராபிக் ராமசாமிக்கு தி.மு.க. ஆதரவு? கருணாநிதி சூசகம்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமியை தி.மு.க. ஆதரிக்கக் கூடும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி களமிறங்கியுள்ளார். அவர் தம்மை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.
இதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை நேற்று அவர் சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் திமுக தலைவர் கருணாநிதியையும் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
நல்ல முடிவு எடுப்போம்
எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் ஆதரித்தால் "டிராபிக்" ராமசாமியின் எண்ணம் நிறைவேறும். தி.மு.க.வை பொறுத்தவரையில் அவருடைய வேட்பு மனுவை ஆதரிப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உடல் நலம் சரி இல்லை. வீட்டில் இருக்கிறார். அவரை நானோ அல்லது பொருளாளர் மு.க.ஸ்டாலினோ சந்தித்து பேசிய பிறகு, டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தருவதை பற்றி அதற்கு பிறகு அறிவிப்போம். அநேகமாக நல்ல முடிவாக தான் இருக்கும்.
ஏலம் விடலை..
தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமென்பதற்காக டிராபிக் ராமசாமி இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்க கருத்து. மற்றபடி எங்களது ஆதரவு யாருக்கு என்று ஏலம் விடுகின்ற நிலையில் இந்த விவகாரம் இல்லை.
இடைத்தேர்தல்- பொதுத்தேர்தல்
இது இடைத்தேர்தல். எனவே புறக்கணிப்பது என்ற முடிவினை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் எடுத்திருக்கின்றன. இது புறக்கணிக்கின்ற நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை அடுத்த பொதுத் தேர்தலுக்கும் எடுத்திட முடியாது. இடைத்தேர்தலுக்கும், பொதுத்தேர்தலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எனவே அப்போது என்ன நிலை என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
இப்போது பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தை எடுத்திருக்கிறார்கள். இது போல எல்லோரும் ஒருங்கிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். எங்களது விருப்பமும் அது தான்.
என்ன வித்தியாசம்
இந்த இடைத்தேர்தலுக்கும் மற்ற இடைத்தேர்தல்களுக்கும் வேறுபாடு உண்டு. இப்போது நடைபெறுவது வேறு. எப்படி யென்றால், ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே பொறுப்பிலே இருப்பதற்கான இடைத்தேர்தல் இது. இந்த இடைத்தேர்தலில் ஏற்படும் வெற்றி தோல்விகள் ஆளும் கட்சியையோ, அல்லது எதிர்க் கட்சிகளையோ பெரிதும் பாதிக்காது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.