மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா ஆளுநர்? தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
இன்று சென்னை வந்த ஆளுநரை, கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை மனுவை அளித்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலில் வெளியான குதிரை பேர செய்தியை ஆதாரங்களாக காட்டி ஏற்கனவே பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார்.
எனவே ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா ஆளுநர்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்தால்தான் மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியும்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி திமுக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடுவாரா என்பது சந்தேகம்.