விவசாயிகளுக்காக செய்யலாமே.. எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை புறக்கணிக்குமா எதிர்க்கட்சிகள்?
சென்னை: வறட்சி காரணமாக கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டு டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மாநிலம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நேரத்தில் தமிழக எம்எல்ஏக்களுக்கு இரட்டிப்பாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், தற்போதுள்ள மாத சம்பளம் ரூ.55000 என்பது இனி ரூ.1.05 லட்சமாக உயரப்போகிறது. ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகளையும் அதிகரித்துள்ளனர். எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி இதை அதிகாரப்பூர்வமாக அன்பளிப்பு என்ற வகையில் கூட செய்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால் மக்களுக்காக நயா பைசா இழக்க விரும்பாத அரசு தங்களுக்குள் ஊதியத்தை உயர்த்திக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அரசுக்கு எதிரான கோபமாக மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
திமுக முன்வருமா
இந்த நிலையில், சம்பள உயர்வை மறுக்க திமுக முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களிடம் எழுந்துள்ள கோபத்தை அறுவடை செய்ய திமுகவுக்கு இது உதவும் என்பது அரசியல் பார்வை என்றால், மற்றொரு பார்வையும் இதில் உள்ளது.
பேசுவதைவிட அதிக பலன்
விவசாயிகள் படும் கஷ்டங்களை தினமும் சட்டசபையில் பேசினாலும் கிடைக்காத அரசின் கவனம், திமுக இவ்வாறு கூறுமானால் கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக பேசியது உண்மையான வார்த்தைகள்தான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும். அரசும்கூட தனது பிடியில் இருந்து இறங்கி வர வாய்ப்பு உருவாகலாம்.
கேள்விக்குறி
திமுக மட்டுமின்றி, காங்கிரஸ், ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் இதை பரிசீலிக்கலாம். திமுக இதைச் செய்ய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசிப்பாரா, ஓபிஎஸ் யோசிப்பாரா என்பதெல்லாம் கஷ்டமான கேள்விகள்தான். ஏனெனில் எதிர்க்கட்சிகளின் தலைமை அப்படி முடிவை எடுத்தாலும், அந்த கட்சி எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக முணுமுணுக்க கூடும். அப்படி நிலைமை உருவானால் இந்த ஆலோசனையை எதிர்க்கட்சிகள் அப்படியே கைவிடுவதற்கு வாய்ப்புள்ளது.
தேசிய முக்கியத்துவம்
இப்படி ஒருமுடிவை எடுத்தால் திமுகவுக்கு தேசிய அளவில் நல்ல பிம்பத்தை பெற்றுக்கொடுக்கும். தலித்துகளுக்காக மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து கவனத்தை ஈர்த்ததை போல திமுகவின் அறிவிப்பு, தேசிய அளவில் பேசப்படும். இது விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் விதையாக மாறும். எதிர்ப்பைக் காட்டியதோடு நில்லாமல், பழைய சம்பளத்தையே பெறுவோம் என திமுக எம்.எல்.ஏக்களும், ஓபிஎஸ் உள்ளிட்ட பிற எம்.எல்.ஏக்களும் அறிவிக்க வேண்டும். அதுதான் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பாக இருக்கும். மக்களும் இவர்களை போற்றுவார்கள்.