காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்ளாத மின்வாரியம்- குமுறும் உற்பத்தியாளர்கள்!!
நெல்லை: காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி அதகரித்து வரும் நிலையிலும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் மின்சார வாரியம் தவிர்த்து வருவதாக மின் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி நடந்து வருகிறது. இதன் ஒட்டு மொத்த உற்பத்தி திறன் 4 ஆயிரத்து 770 ஆகும்.
மேலும் புனல் மற்றும் நீர் மின் நிலையங்கள், எரிவாயு, மத்திய தொகுப்பு, காற்றாலை உள்ளிட்டவற்றிலும் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. இதில் காற்றாலை மின்சாரம் காற்று வீசும் போது மட்டும் தான் பலன் தரும்.
குறிப்பாக ஆண்டுதோறும் மே 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை இயங்கும். ஆரல்வாய்மொழி உள்பட பல பகுதிகளில் 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் மழை பொழிவு இருந்ததால் காற்றின் வேகம் குறைந்து காற்றாலை மூலம் மின்சாரம் தாமதம் ஆனது. இந்த நிலையில் இம்மாத கடைசி வாரத்தில் காற்று வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி தயாராகி விட்டது.
அன்றைய தினமே மின் வாரியம் 10 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செயதது. மேலும் கடந்த மூன்று நாட்களாக தினசரி 10 முதல் 20 மெகா வாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்து வந்தது.
ஆனால் காற்று வீச தொடங்கிய ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மின்வாரியம் மின்சாரத்தை முழு அளவில் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதிக அளவு விலை கொடுத்து அனல்மின் உற்பத்தி செய்யும் தனியாரிடமே மின்சாரம் கொள்முதல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது காற்றாலை மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 3.14 ஆக உள்ள நிலையில் தனியாரிடம் ரூபாய் 5 விலை கொடுத்து வாங்குவதாக குற்றம் சாட்டு எழுநது வருகிறது. இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள வலியுறுத்தி வருகின்றனர்.