என் கிட்ட பாஸ்போர்ட்டே இல்லை, எப்படி வெளிநாடு போறது.. தினகரன் அடேங்கப்பா பேச்சு!
பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் நான் எப்படி வெளிநாட்டுக்கு தப்பி ஓடமுடியும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
சென்னை: பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் நான் எப்படி வெளிநாட்டுக்கு தப்பி ஓடமுடியும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
இரட்டை இலை சின்னத்தை பெற டெல்லி தொழிலதிபரிடம் லஞ்சம் அளித்ததாக தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள டெல்லி போலீஸார் தினகரனை கைது செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியானதாக விமான நிலைய போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது நடவடிக்கை தவிர்க்க நான் வெளிநாட்டுக்கு தப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை. எப்படி நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது? தற்போதைய அரசியல் குழப்பம் தேவையில்லாதது என்றார் அவர்.