பலே கில்லாடி.. ஆண் வேடமிட்டு பல வீடுகளில் திருடிய இளம் பெண்.. மடக்கி பிடித்த போலீஸ்!
சென்னை: சென்னையில் பூட்டிய வீடுகளில் ஆண் வேடமிட்டு கொள்ளையடித்த பெண் மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை அடுத்த கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் ஆடிட்டராகவும் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் காற்றுக்காக தன்னுடைய வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது திடீரென சத்தம் கேட்டு விழித்த மணிகண்டன், வீட்டினுள் 3 கொள்ளையர்கள் புகுந்ததை தெரிந்துகொண்டார்.
சிறிது நேரம் கழித்து சுதாரித்துக்கொண்ட மணிகண்டன் திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனால் 3 திருடர்களும் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களை மணிகண்டன் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். அவ்வழியாக வந்த ரோந்து போலீசார் 3 திருடர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இளைஞன் ஒருவன் 2 சிறுவர்களுடன் சேர்ந்து ஏழு கிணறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும் இளைஞனின் செயல்களில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது திருடர்களில் ஒருவர் ஆண் வேடமிட்ட பெண் என்பதும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் வேடமிட்ட பெண் முத்தியால் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகா என்பது தெரியவந்தது. மேலும் அம்பத்தூர் மற்றும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரும் உதவியாக இருந்ததும் தெரிய வந்தது. பெண்ணாக இருந்தால் சுலபமாக பிடித்து விடுவார்கள் என்பதால் ஆண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளனர்.
3 பேர் மீதும் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். சிறுவர்கள் 2 பேரையும் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். ஆண் வேடம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைதாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.