சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொடூரமாக கொலை.. திருத்தணி அருகே பயங்கரம் !
திருத்தணி: திருத்தணி அருகே சேலையால் கழுத்து இறுக்கி பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி பட்டாபிராம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் (35), லட்சுமி (30), தம்பதிக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஜனா (8), ஹேமாவதி (6) என்ற மகன், மகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து வருடத்துக்கு முன் கணவரை பிரிந்துசென்ற லட்சுமி, தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்தார். குழந்தைகளும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லட்சுமி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் லட்சுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று காலை திருத்தணி அருகே எட்டிக்குப்பம் ஏரியில் லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து சேலையால் இறுக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி எட்டிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவல்படி திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லட்சுமியை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையால் கழுத்து இறுக்கி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.