100 நாள் வேலை திட்டத்திற்காக வந்த பெண் மயங்கி விழுந்து பலி.. மண் கூடையுடன் விழுந்து இறந்த பரிதாபம்
புதுக்கோட்டை: மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் வேலைக்காக வந்த பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து கிடந்த நிலையில் அதிகாரிகள் யாரும் அந்த இடத்திற்கு நீண்டநேரமாக வராததால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைகள் நடந்து வந்தன. பனங்குளம் வடக்கு கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஒன்றை மராமத்து செய்யும் பணியில் சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் பனங்குளம் வடக்கு மழவராயர் தெருவைச் சேர்ந்த நடனம் என்பவரின் மனைவி ராஜம்மாள் (54). மண் வெட்டி கூடையில் அள்ளி கரையில் போடுவதற்காக தூக்கிச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து கீழே விழுந்த ராஜம்மாளை தூக்கி தண்ணீர் கொடுக்க முயன்றனர். ஆனால் கீழே விழுந்தவுடனேயே இறந்துவிட்டார் ராஜம்மாள்.
இதைப் பார்த்து உறவினர்களும் உடன் வேலை செய்தவர்களும் கதறி அழுதனர். இவருக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். காலை 10 மணிக்கு ராஜம்மாள் இறந்தும், போலீஸாரோ மற்ற அதிகாரிகளோ மணி 12 ஆகியும் வரவில்லை. இதனால் கோபமடைந்த உறவினர்களும், கிராமத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். சமரசத்தில் ஈடுபட்டனர். ராஜம்மாள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் பேசப்படும் என்று உறுதிமொழி தந்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.