சொத்துக்காக மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகள்
சொத்துக்காக சொந்த மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகளால் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ளது புளியரை பகவதிபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சார்ந்தவர் வள்ளிக்கண்ணு. மனைவி ருக்குமணி. வயது 80. கணவர் இறந்தபின் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்.
இவருக்கு 2 மகள்கள், மகன் ஆகியோர் உள்ளனர். மகள்கள் வெளியூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அவர்கள் அங்கேயே வசித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான மகன் குமார் மட்டும் ருக்குமணி வீட்டை ஒட்டிய பகுதியில் மனைவி வசந்தி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ருக்குமணி தூங்கும்போது கட்டிலில் இருந்து விழுந்துவிட்டதாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுவதாகவும், வசந்தி பக்கத்து வீட்டு இளைஞரை அழைத்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் சொல்லியுள்ளார்.
உடனடியாக செங்கோட்டையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது. மூதாட்டி ருக்குமணிக்கு முதலுதவி செய்து செங்கோட்டைஅரசு மருத்துவமனையில் இருந்து பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில், ருக்குமணியை அவரின் மருமகள் அடித்து கொலை செய்துவிட்டதாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபனுக்கு தகவல் கிடைக்கவே அவர் மருமகள் வசந்தியை பிடித்து விசாரணை செய்தார்.
அப்போது மாமியாரை சொத்துக்காக கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு நாடக மாடியது அம்பலமானது. இதனையடுத்து வசந்தியை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
வசந்தி கொலைக்கு பயன்படுத்திய கட்டையைப் பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் செங்கோட்டை வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.