ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த அம்மா, மகள் - மருத்துவமனையில் உயிர் ஊசல்
சென்னை: சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் சென்றது. காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சானிடோரியம் ரயில் நிலையத்தை கடந்து ரயில் செல்லும்போது கூட்ட நெரிசலில் 30 வயது இளம்பெண் ஒருவர், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தினர்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தாய், மகள் இருவரையும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடும் பெண் சுயநினைவு இழந்து விட்டார். குழந்தையும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது. இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல உள்ளார்.
இருவரையும் தாம்பரம் ரயில்வே போலீசார் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாய், மகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.