கள்ளக்காதலன் ”சண்முக”த்திற்காக கணவன் ”சண்முகத்தை” போட்டுத்த தள்ளிய மனைவிக்கு ஆயுள் தண்டனை!
கடலூர்: கடலூர், சிதம்பரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அரியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சத்யா. சண்முகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வெளிநாடு சென்றார்.
இதனால் சத்யா தனது தாய் வீடான சீர்காழி அடுத்த எருக்கூரில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற சண்முகத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதனையறிந்த சண்முகம், வெளிநாட்டில் இருந்து வந்து சீர்காழியில் இருந்த தனது மனைவி சத்யா மற்றும் இரு மகன்களை அழைத்துக் கொண்டு பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் மெயின்ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இருப்பினும், சத்யா, சண்முகம் வீட்டில் இல்லாத நேரத்தில் அப்பு என்கிற சண்முகத்தை அகரத்திற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியே சென்றிருந்த சண்முகம், வீட்டிற்கு வந்தபோது சத்யா, அப்பு என்கிற சண்முகமும் தனிமையில் இருந்ததைப் பார்த்து சத்யாவிடம் தகராறு செய்தார். இதனால், ஆத்திரமடைந்த சத்யாவும், அப்புவும் சேர்ந்து சண்முகத்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார், சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர், கணவனைக் கொலை செய்த சத்யாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். கள்ளக்காதலனான அப்பு என்கிற சண்முகம் விடுதலை செய்யப்பட்டார்.