கணவரை முதலில் கட்டையால் அடித்து.. பிறகு கழுத்தை நெரித்துக் கொன்ற.. "தங்கம்"!
சேலம்: சேலத்தில் சொல் பேச்சு கேளாமல் ஷேர் மார்க்கெட்டில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்த கணவரை, மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த சதாசிவம் (50) என்பவரது மனைவி தங்கம் (45). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சதாசிவம் மர்மமான முறையில் அவரது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சதாசிவத்தின் காதில் இருந்து ரத்தம் கசிந்துள்ளதாலும், கழுத்தில் காயங்கள் இருந்ததாலும் சந்தேகம் அடைந்தனர்.
இதனால், சதாசிவம் மரணம் குறித்து போலீசார் அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று இரவு சதாசிவம் - தங்கம் இடையே சண்டை நடந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தங்கத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் சதாசிவத்தை தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "என் கணவர் நான் கூறியதை கேட்காமல் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட என்னை அடிக்க வந்தார். நான் தற்காப்பிற்காக அவரை கட்டையால் அடித்தேன். இதில் மயங்கி விழுந்த அவரை, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தங்கத்தை கைது செய்த போலீசார், சதாசிவம் மரணத்திற்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.