கள்ளக் காதலால் விபரீதம்.. செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை
செங்கோட்டையில் மின்வயரால் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டை அருகிலுள்ள தென்பொத்தை கிராமத்தை சேர்ந்த வெல்லத்தாய், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், முருகனின் சகோதரி வீட்டிற்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். இவருக்கும் முருகனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் திருமணம் ஆகாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு பாலமுருகன் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே முருகனுக்கு திருமணம் ஆகி குடும்பம் சிவகிரியில் உள்ளது. இதனிடையே வெள்ளத்தாய் நடத்தை மீது முருகனுக்கு சந்தேகம் உருவாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்றும் கணவன், மனைவிக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. மகன் பாலமுருகன்
பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் மனைவியை வீட்டில் இருந்த மின் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு முருகன் தப்பியோடி விட்டார்.மகன் பாலமுருகன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தாய் கொலையுண்டு கிடப்பது கண்டு கதறி அழுதார்.
இதையடுத்து உறவினர்கள் வந்து பார்த்தப் போது வெள்ளத் தாய் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி முருகனை வலைவீசித் தேடி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.