வீட்டு முன்பு கோலம் போட்ட பெண் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை.. தூத்துக்குடியில் கொடூரம் !
வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை, எதிர் வீட்டுக்காரர் அடித்து கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: வீட்டின் முன்பு கோலம் போட்ட பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் முத்தையாபுரத்தில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி (வயது 35). இவர்களுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். இதனிடையே செண்பகவல்லியின் எதிர்வீட்டில் வசிப்பவர் அம்பிகாபதி. இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்வீட்டில் வசித்து வந்த செண்பகவல்லி அவரது குழந்தைகளை திட்டுவது போல் அம்பிகாபதியை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை செண்பவல்லி கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம்பிகாபதி உருட்டுக்கட்டையுடன் செண்பகவல்லியை சரமாரியாக தாக்கினார். இதில் செண்பகவல்லி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அங்கிருந்து அம்பிகாபதி தப்பி ஓடினார். உயிருக்கு போராடிய செண்பகவல்லியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே செண்பகவல்லியை அடித்துக் கொன்ற அம்பிகாபதி தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.