என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.. கமிஷ்னர் ஆபிசில் பெண் பரபரப்பு புகார்
தனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தன்னை அவருடன் சேர்த்து வைக்க கோரியும் பெண் ஒருவர் கமிஷ்னர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை: தனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான இவருக்கும் சசிகலா (33) என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 19 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு சசிகலாவுக்கும் வெங்கடேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் நடந்து 20 வருடம் ஆகிறது.
எனது கணவர் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டு 2-வது திருமணத்துக்கு முயற்சி செய்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திருமண பத்திரிகையும் அச்சடித்து விட்டார். எனவே எனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். என்னை கணவருடன் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.