புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் சிகிச்சை பலனின்றி சங்கீதா மரணம்
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சங்கீதா. இவர் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். சங்கீதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சை பெற பணம் இல்லாமல் சங்கீத சிரமப்பட்டு வந்தார்.
இதை அறிந்த சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். மேலும் காவலர் நல நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் வழங்கினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை சங்கீதா உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.