விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் அடாவடியாகப் பேசி தாலியைப் பறித்த பெண் எஸ்.ஐ.!
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த :ஆசிரியையிடம் ஆபாசமாகப் பேசி திட்டியதோடு அவர் அணிந்திருந்த நகையையும் பறித்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். லாவண்யா தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
திருமணத்தின் போது லாவண்யாவுக்கு 25 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. அவற்றைத் திரும்ப பெற்றுத் தரக் கோரி லாவண்யா, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகணனிடம் புகார் மனு கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள், லாவண்யாவையும், அவரது கணவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது ஆசிரியை லாவண்யாவிடம் முரட்டுத்தனமாக நடந்துள்ளார் வேலம்மாள். லாவண்யா அணிந்திருந்த தாலிச் சங்கிலியை கழற்றி கொடுக்குமாறு எஸ்.ஐ. வேலம்மாள் கேட்டுள்ளார். அதை தரமறுத்த லாவண்யாவை, வேலம்மாள் தரக்குறைவாக பேசி தாலிச் சங்கிலி மற்றும் மோதிரத்தை பறித்துக்கொண்டார்.
இதுகுறித்து லாவண்யா, ராமநாதபுரம் கூடுதல் எஸ்பி வெள்ளத்துரையிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், திருவாடானை போலீஸ் டி.எஸ்.பி. சேகர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். விசாரணையில், பெண் எஸ்.ஐ.வேலம்மாள் லாவண்யாவின் தாலி செயினை பறித்துக்கொண்டதும், தரக்குறைவாக பேசியதும் உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து வேலம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை, எஸ்.பி. மயில்வாகணனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவறாக நடந்து, நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் வேலம்மாள் பலமுறை இதுபோல முரட்டுத்தனாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என்கிறார்கள். விசாரணைக்கு வந்தரவர்களிடம் இப்படித் தவறாக நடந்ததற்காக அவர் 8 முறை மெமோ கொடுக்கப்பட்டவராம்.
வேலம்மாள் போல பலர் காவல்துறையில் களங்கமாக இருந்து வருகின்றனர். அவர்களை களையெடுப்பதுதான் காவல்துறைக்கும் நல்லது, பொதுமக்களுக்கும் நல்லது.