மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 6 பெண்களுக்கு மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 6 பெண்கள் இன்று மயங்கி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தலைநகர் சென்னையில் 6 நாட்களாக இரவு பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6 பெண்கள் இன்று மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும், அதனை ஏற்க மறுத்து நிரந்தரச் சட்டத்தைக் கோரி ஒற்றுமையுடன் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள்.
இந்நிலையில், இன்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 6 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இன்று சென்னையில் காணப்படுவதால், மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவிகள் 6 பேர் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பதற்றம் உருவானது. என்றாலும், மாணவிகளை போராட்டக்காரர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், நாங்கள் பெண்கள் என்பதால் போராட்டத்தில் இருந்து விலக மாட்டோம். தமிழ், தமிழர்கள் என்று போராட்டத்தில் குதித்துவிட்டால் கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து கலையவும் மாட்டோம். மயக்கம் அடைந்தவர்கள் சரியான பின்னர் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று உறுதியாக கூறினார்.