கடலூர் அருகே டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பெண்கள்!
கடலூர் மாவட்டத்தில் அன்னதானம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே அக்கடையை அடித்து நொறுக்கினர்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னதானம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே அக்கடையை அடித்து நொறுக்கினர்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அவ்வப்போது பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தங்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற ஆங்காங்கே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள அன்னதானம்பேட்டையில் டாஸ்மாக் கடை மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக உள்ளதாக அதை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். மேலும் மதுபான பாட்டில்களையும் உடைத்தெறிந்தனர்.
எனினும் ஆத்திரம் அடங்காததால் குறிஞ்சிப்பாடி நடுவீரம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸாரும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணியும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையவில்லை.
இன்னும் 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைடை அகற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் கடையை அகற்றாவிட்டால் மீண்டு்ம போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.