ஹலோ.. நாங்க குடிச்சா என்னாகும் தெரியுமா.. நெல்லையில் பெண்கள் செம போராட்டம்!
நெல்லையில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் குடித்து விட்டு கும்மாளம் போட்டால் குடும்பம் என்னவாகும் என்பதை பெண்கள் நடித்து காட்டினர்.
சென்னை: நெல்லையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடித்தால் வாழ்க்கை என்ன கதியாக இருக்கும் என்பதை ஆண்களுக்கு உணர்த்த குடித்தது போல் நடித்து காட்டி போராட்டம் நடத்தினர் பெண்கள்.
டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு படுத்து கிடப்பதால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. மேலும் இதனால் எத்தனை உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் அப்பாவிகள உயிரிழக்க நேரிடுகிறது.
இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3,500 கடைகள் மூடப்பட்டன.
மாற்று இடம்
இந்நிலையில் வேலையிழந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மாற்று இடங்களில் கடையை திறக்க ஆயத்தமாகினர். இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெண்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடைகளை புதிதாக ஊருக்குள் வைப்பதற்கும் ஏற்கெனவே உள்ள கடையை மூட வலியுறுத்தியும் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல முறை கோரிக்கை வைத்து மூடாத கடைகளை பெண்களே யாருடைய உதவியும் இல்லாமல் அடித்து துவம்சம் செய்து வருகின்றனர்.
மதுபானக் கடை வேண்டும்
இவர்களுக்கு இணையாக குடிமகன்களும் டாஸ்மாக் கடை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸாரும் வருவாய் துறை அதிகாரிகளும் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடையை எடுக்க வலியுறுத்தி மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடித்து நடித்து காட்டினர்
இதைத் தொடர்ந்து பெண்களும் குடித்தால் வாழ்க்கையும், குடும்பமும், பிள்ளைக் குட்டிகளும் என்னவாவர் என்பதை உணர்த்த பெண்கள் குடிப்பது போல் நடித்து காட்டினர். இதைத் தொடர்ந்து 11- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.