காலி குடங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட பெண்கள்.. கரூரில் பரபரப்பு
கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கரூர்: 40 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க., பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அங்கு முற்றுகையிட்டனர். வேலுசாமிபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் போலீசாருக்கு பொதுமக்களுக்கும் இடையே அரை மணி நேரம் வாக்குவாதம் நடந்தது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிமுக பொதுக்கூட்டத்துக்கு வந்த அமைச்சரை 100-க்கும் மேற்பட்ட பெண்கள், பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.