2 மாதங்களாக குடிநீர் இல்லை.. காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.. திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசலில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
காலிக் குடங்களுடன்...
திருவண்ணாமலை மாவட்டம் துளுவபுஷ்பாகிரி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் ஆரணி அருகில் சந்தவாசலில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குமுறல்
அப்போது பேசிய பெண்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கி.மீ தூரத்திற்கு சுற்றி வந்தாலும் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம்சாட்டினார்கள்.
பூதாகரம்
மேலும், கடந்த ஜனவரியில் இருந்து குடிநீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், தற்போது அது பூதாகரமாக மாறி இருக்கிறது என்றும் பெண்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெண்கள் குற்றம்சாட்டினர்.
போக்குவரத்து பாதிப்பு
பெண்கள் நடத்திய இந்த சாலை மறியல் போராட்டத்தால் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அளித்த உறுதிமொழிக்கு பின்னர் போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.