காதல் விவகாரம்.. தோழியை கொன்று புதைத்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
கடலூர்: தனது ஆண் நண்பருடன் பழகியதால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தனது நெருங்கிய தோழியை கொலை செய்து புதைத்துவிட்டு, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் புலியூரை அடுத்த காட்டுசாகையை சேர்ந்தவர் திவ்யா. செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றிய சித்ரா என்ற பெண்ணுடன் திவ்யா நெருங்கிய நட்புடன் பழகி வந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் தோழியுடன் சென்னைக்கு செல்வதாக கூறிச்சென்ற திவ்யா மாயமானார். இதுபற்றி காடம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், திவ்யாவின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, நெருங்கிய தோழியான சித்ராவுக்கு அதிக அழைப்புகள் சென்றது தெரிய வந்தது.
சித்ராவிடம் விசாரித்தபோது, திய்வாவை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாகவும், செல்போனில் மட்டும் பேசி வந்ததாகவும் கூறியுள்ளார். சித்ராவை தொடர்ந்து திவ்யாவின் எண்ணுக்கு அடிக்கடி தொடர்புகொண்ட அன்பு என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், திவ்யா காணாமல் போன அன்று, திவ்யா, அவரது நெருங்கிய தோழி சித்ரா மற்றும் சித்ராவின் ஆண் நண்பர் ஆகியோரை பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஒன்றாக பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சித்திராவை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறையினர், அவரிடம் உரிய முறையில் விசாரித்துள்ளனர். அப்போது, திவ்யாவை கொலை செய்துவிட்டு தனது நண்பருடன் சேர்ந்து காமாட்சிப்பேட்டை என்ற இடத்தில் கெடிலம் ஆற்றில் புதைத்து வைத்ததும் தெரியவந்துள்ளது. தான் காதலித்த நபரையே திவ்யாவும் காதலித்ததால் சித்ராவை திவ்யா கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்காக காங்கேயக் குப்பத்திற்கு சித்ராவை போலீசார் அழைத்துச் சென்றனர். முந்திரி காட்டின் வழியே சென்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய சித்ரா, அங்கிருந்த பாலடைந்த கிணற்றில் குதித்துவிட்டார். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றை யாரும் பயன்படுத்தாத நிலையில் அதில் விஷவாயு இருக்கலாம் என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு துறை நீண்ட நேரத்திற்கு பின்பு சித்ராவை உயிரிழந்த நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்டனர்.