விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது- எடப்பாடி பழனிச்சாமி
தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கூறியுள்ளார்.
டெல்லி: விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நாட்டின் புதிய குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6 அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திரமோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது நீட் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வில் விலக்கு
பிரதமர் உடனான இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
தடை செய்யவில்லை
அப்போது செய்தியாளர்கள், பெட்ரோலிய மண்டலம், ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றியும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு இல்லத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே என்றும் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலையில் தமிழ்நாடு இல்லத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போதும் வந்திருக்கிறீர்கள். யாரும் தடை செய்யப்படுவதில்லை என்று கூறினார்.
பெட்ரோலிய மண்டலம்
நாகை கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. இன்ற நேற்றல்ல கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த திட்டம் உள்ளது என்றார். இப்போது பாதிக்கப்பட்டுள்ள குழாய்களை செப்பனிடும் பணி நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.
செயல்படுத்த மாட்டோம்
ஹைட்ரோகார்பன் திட்டம் இப்போது கொண்டு வரப்பட்டதல்ல, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.