மாசுபடும் தண்ணீர்.. இந்த வீடியோ பாருங்க..இனி இப்படியும் நடக்கலாம்! #worldwaterday
சென்னை: ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து வீட்டுமனைகளாக்கி காசு பார்த்து கொண்டே போனால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு சிறுநீரை சுத்திகரித்து குடிக்கும் நாள் வெகு விரைவில் வந்து விடும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் மக்கள் குடிநீருக்காக தவியாய் தவிக்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை என இப்போது தண்ணீர் வினியோகம் 20 நாள்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
அதிலும் சில நேரத்தில் நல்ல தண்ணீரும், சில நேரத்தில் சாக்கடை நீர் கலந்தும் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வந்த சோழவரம் ஏரி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு போயுள்ளது. இதனால் இன்னும் 16 நாள்களுக்குத்தான் சென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் நிலைகளை அழித்து
ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை அழித்து வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி சென்னையே அடித்து செல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு சென்னையி்ல் வெள்ளம் ஏற்பட்டது. ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
தூர்வாரவில்லை
மேலும் ஏரிகள், குளம், ஆறுகள் ஆகியவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் அடைமழை பெய்தாலும் அந்த நீரை நாம் காக்க தவறிவிட்டு தற்போது மழை இல்லை என்று கழுதைகளுக்கு கல்யாணம் நடத்தி வருகிறோம்.
அறைகூவல்
கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது நீர் நிலைகள் தூர்வாரப்படுவதில்லை என்றும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும் சில அரசியல் கட்சியினர் கூப்பாடு போட்டனர். அத்தோடு சரி, அதை சிந்திப்பதே இல்லை. மழை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகள் மாண்டு வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மெரினா பாலைவனம்
தண்ணீரின் சிக்கனம் குறித்து சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சென்னை மட்டுமல்ல கிராமங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களுக்கு சோலைவனமாக இருந்த மெரினா பாலைவனமாகப் போவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.1500
மெரினாவில் உணவு பண்டங்கள் வாங்கும் கடையில் காலை ஒரு லிட்டர் தண்ணீ்ர் ரூ.1200-க்கு விற்றது. மேலும் மதியம் 300 ரூபாய் அதிகரித்து ரூ.1500-ஆகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படும் என்பது அரசு விதியாம். அதை சரிபார்க்க ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கினால் கடைக்காரர் என்ட்ரி போடுவதை போல் நமது அடைாள சான்றிதழை தண்ணீர் கடையில் கொடுத்தால் ஒரு லிட்டர் வாங்கினோமா இல்லையா என்பது தெரியும்.
எனர்ஜி டிரிங்க்
நாள் முழுவதும் தண்ணீர் தாகமே எடுக்காத அளவுக்கு எனர்ஜி டிரிங்க் வந்து விடுமாம். அதன் விலை ரூ.500தான். மெரினாவுக்கு அருகில் சிறுநீர் கழிக்கும் இடங்கள் இருக்கும். அங்கு சென்று சிறுநீரை பாட்டிலில் பிடித்துக் கொள்ள வேண்
டும்.
சிறுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தற்போது தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதை போல் சிறுநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் கொடுத்து அதை குடிக்கும் நிலை ஏற்படலாம். இவை அனைத்தும் சிரிக்க அல்ல சிந்திக்க மட்டுமே. இந்த நிலை ஏற்படாமல் இருக்க, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள், மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம். இன்று உலக தண்ணீர் தினம்.