எழுத்தாளர், உறவினர்கள் சூழ பெசண்ட் நகர் மின்மயானத்தில் அசோகமித்ரன் உடல் தகனம்
எழுத்தாளர் அசோகமித்ரன் உடல் இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதி ஊர்வலத்தில் எழுத்தாளர்கள், உறவினர் கலந்து கொண்டனர்.
சென்னை: பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்ரன். 86 வயதான அவர் தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர். செகந்திராபாத்தில் பிறந்து சென்னையில் குடியேறிய அவர் இறுதி வரை இங்கே வாழ்ந்து மறைந்தார்.
சென்னை வந்த போது, ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய அசோகமித்ரன், பின்னர் முழு நேர எழுத்தாளர் பணியை மேற்கொண்டார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், தண்ணீர், 18வது அட்சக்கோடு, மானசரோவர், ஒற்றன் உள்ளிட்ட நாவல்களை அவர் எழுதியுள்ளார்.
சாதித்ய அகாடமி விருது
அப்பாவின் ஸ்நேகிதர் என்ற அவர் எழுதிய நூலுக்காக 1996ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், வேளச்சேரியில் உள்ள தமது மகனின் இல்லத்தில் தங்கி இருந்தார். அங்கு அவர் மரணம் அடைந்தார்.
இலக்கியவாதிகள் இரங்கல்
எழுத்தாளர்கள் ஜெயமோகன், திலீப்குமார் உட்பட ஏராளமான இலக்கியவாதிகள் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் நேரில் பலர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கமல் இரங்கல்
அசோகமித்திரன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அசோகமித்திரனை வாசித்து, நேசித்து சந்தித்த பெருமை பெற்றதாக அதில் கமல் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது எழுத்துக்கள் தமிழக எழுத்துலகில் நிலைத்து நிற்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
உடல் தகனம்
இன்று காலை 9 மணிக்கு அவரது வீட்டில் அசோகமித்ரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காலை 11 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.