தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
சென்னை: தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இலக்கியத்துக்கான மிக உயரிய விருதாக மதிக்கப்படும் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் எழுத்தாளர், பூ மாணிக்கவாசகம் எனும் பூமணி. இவர் எழுதி 2012ல் வெளியான நூல் அஞ்ஞாடி.
தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள் போன்றவற்றை பூமணி தனது தனித்துவமான நடையில், ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில் எழுதியிருந்தார்.
கிராமங்களில் வழக்கத்தில் இருக்கும் சொலவடை இந்த நூலில் அதிகம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. கிரியா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.