எடப்பாடி அரசின் அலட்சியம்... ஆந்திராவுக்கே தப்பி ஓடும் பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழக அரசின் அலட்சியத்தால் சியாமி ஸ்மார்ட் போன் நிறுவனம் தமது 2-வது யூனிட்டையும் ஆந்திராவிலே அமைக்கிறதாம்.
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசின் அலட்சியத்தால் சீனாவின் சியாமி ஸ்மார்ட் போன் நிறுவனம் தமது 2-வது யூனிட்டையும் ஆந்திராவுக்கே கொண்டு போய்விட்டது என குமுறுகின்றனர் தமிழக அதிகாரிகள்.
தமிழகத்தில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால் அரசின் அலட்சியம் மற்றும் கமிஷன் பேரங்களால் தலைதெறிக்க தமிழகத்தைவிட்டே தப்பி ஓடி அண்டை மாநிலங்களில் அடைக்கலமாகின்றன.
தமிழகத்தில் 2-வது யூனிட்
சீனா ஸ்மார்ட் போன் நிறுவனங்களான சியாமி மற்றும் ஜியோனி ஆகியவை ஏற்கனவே ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் முதலாவது யூனிட்டுகளை அமைத்துள்ளன. இதில் சியாமி நிறுவனம் தமது 2-வது யூனிட்டை தமிழகத்தில் அமைக்க விரும்பியது.
அதிகாரிகளுக்கு தகவல்
இதற்காக தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சியாமி நிறுவனம் அணுகியது. இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அக்கறையே இல்லையாம்
ஆனால் தமது அரசுதான் எப்போது கவிழுமோ என்ற அச்சத்தில் இருக்கும் எடப்பாடியார் இதுபற்றிய விவகாரத்தில் கவனமே செலுத்தவில்லையாம். இதனால் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் சலித்துப் போனதாம் சியோமி நிறுவனம்.
ஆந்திராவுக்கே போனது
தற்போது தமது 2-வது யூனிட்டையுமே ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் அமைப்பது என முடிவு செய்துள்ளதாம் சியாமி நிறுவனம். இப்படியெல்லாம் அலட்சியம் காட்டினால் தமிழகம் எங்கே தொழில்துறையில் முன்னேறுவது என நொந்து போகின்றனர் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.