விசாரணைக்கு வரும் ஜெ. அப்பீல்.. வேகம் பிடிக்கும் அதிமுகவினர் பூஜைகள்.. குற்றாலத்தில் யாகம்!
குற்றாலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் முதல்வராக வேண்டி குற்றாலத்தில் அதிமுக சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று ஜாமீனில் உள்ளார். அவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறவும்,மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர், அமைச்சர்கள், இந்நாள், முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள், எம்.பிக்கள் யாகம், காவடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஜெயலலிதாவின் அப்பீல் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த யாகங்களும், வேள்விகளும் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அமைச்சர் பா. வளர்மதி ஒரு யாகத்தில் கலந்து கொண்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவில், அகஸ்தியர் வாழ்ந்த குற்றாலம், பாபநாசம் என எராளமான ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மகா யாகங்கள், விளக்கு பூஜை, கோமாதா பூஜைகள், சங்கு அபிஷேகம், சங்கு யாகம் என இந்து மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அனைத்து விதமான பூஜைகள் யாகங்களும் முறைப்படி இந்துமத சடங்கு முறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், வடநாட்டில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய முக்கிய அரசியல் தலைவர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்லும் ஆலயமும்,ரெட்டி சகோதரர்கள் சிறப்பு யாகம் நடத்திய குற்றாலம் மவுன சாமிகள் மடம் என்றழைக்கப்படும் சித்தேஸ்வரி பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தியும் அமாவாசை சேர்ந்து வந்த தினமான நேற்று இந்த ஆலயத்தில் "சக்தி வாய்ந்த "பிரத்தியங்கரா தேவி யாகம்" அதிமுகவினர் சார்பில் நடந்தப்பட்டது.
2 மணி நேரம் நடந்த இந்த சிறப்பு யாகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மாவட்ட செயலாளரும் வாரியத்தலைவருமான முருகையா பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.