ஏற்காட்டில் முகாமிடும் எடப்பாடி பழனிச்சாமி... கோடைவிழா, மலர்க்கண்காட்சி தொடக்கம்
சேலம் ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியைத் தொடங்கிவைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வருகிறார்.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைக்கிறார்.
ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை காலை 11 மணிக்கு, ஏற்காடு கலையரங்கத்தில் நடக்கிறது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்குகிறார்.
வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
கோடை விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். முன்னதாக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கும் அவர் நாளை காலை கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.