சென்னையை மேலும் பதம் பார்க்க அந்தமானில் இருந்து வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னை: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை நெருங்கி வரும்போது கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் கொட்டித் தீர்த்த மழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் திங்கட்கிழமை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
|
சென்னை
ஏற்கனவே பெய்த மழையால் தத்தளித்து மெதுவாக மீண்டு வந்த சென்னை தற்போது பெய்து வரும் கனமழையால் திக்கு முக்காடி கொண்டிருக்கிறது.
கனமழை
நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையாவது சூரிய ஒளியை பார்ப்போம் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். இன்று காலை முதலும் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தமான்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை போதாது என்று அந்தமான் அருகேயும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது மெதுவாக நகர்ந்து சென்னையை நோக்கி வருகிறது.
வெள்ளம்
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது. அது மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதால் கனமழை விட்டு விட்டு பெய்கிறது. அது சென்னையை நெருங்கும்போது மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.