இனி காக்கிகள் கை நீட்டினால் 100க்கு கூப்பிடுங்க
சென்னை: காக்கிச்சட்டை அணிந்த சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் என்ற பெயரில் ‘வசூலித்தால்' காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசக்கடைசி எல்லோருக்கும்தான் வரும்... அதென்னவோ மாசக்கடைசி என்றால் சாலைகளில் காக்கிகளின் கூட்டமும் அதிகமாகிவிடும் சட்டம் ஒழுங்கை காப்பற்றுகிறேன் பேர்வழி என்று சிறிய சாலைகள், தெருக்களில் ஏன் முட்டுச்சந்து கூட விடாமல் நின்றுகொண்டு ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி வசூலிக்கின்றனர். இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வெள்ளை சட்டை' அணிந்திருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு மட்டும்தான் அபராதம் வசூலிக்கும் உரிமை உள்ளது. அவரிடம்தான் அபராதம் வசூலித்ததற்கு கொடுக்கப்படும் ரசீது புத்தகம் இருக்கும்.
சட்டம் - ஒழுங்கை சரிசெய்யும் காக்கி சட்டை போலீஸாருக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிடும் அதிகாரம் மட்டும்தான் இருக்கிறது. அபராதம் வசூலிக்க அதிகாரம் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை காக்கி சட்டை போலீஸார் பிடித்தாலும், அருகே இருக்கும் போக்குவரத்து போலீஸாரிடம்தான் அந்த நபரை ஒப்படைக்க வேண்டும்.
காக்கி சட்டை அணிந்திருக்கும் போலீஸார் யாராவது அபராதம் வசூலித்தால் அந்த மாதிரியான வசூல் ராஜாக்களை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.